Powered by Blogger.

Tuesday, June 12, 2012

யாரும் சொல்ல விரும்பாத வாக்குமூலங்கள்

இறுதிக்கட்ட  போரில் விடுதலைப்புலிகள் மேல் குற்றம் சுமத்தி ஒரே நபர்கள் பல பெயர்களில் பதிவுகள் எழுதி வியாபாரம் நடத்தியது அனைவரும் அறிந்ததே.

மக்களை மனித கேடையங்களாக பாவித்தார்கள் வெளியேறிய மக்களை சுட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகளுடன் தாங்கள் அறிவு ஜீவிகள் என்றும் தங்கள் அறிவுரைகளை புலிகள் கேட்கவில்லை என்பது அவர்களின் உச்சக்ட்ட குற்றச்சாட்டுகள்.

மன்னாரில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரைக்கும் குறிப்பாக கிளிநொச்சி நகர் சிறிலங்கா ராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்ட்டதன் பிற்பாடு முள்ளிவாய்க்கால் வரை புலிகள் எப்படி பின்வாங்கி சென்றார்கள் எப்படி மக்கள் வெளியேறினார்கள் என்பது இதுவரை எந்த ஆவணப்படுத்தலையும் யாரும் செய்யவில்லை.

புலிகள் பிடித்தார்கள் சுட்டார்கள் என்று எழுதியவர்கள் யாரும் புலிகள் எப்படி சமர் செய்தார்கள் எப்படி மக்களை பாதுகாக்க போராடினார்கள் என்று எழுதவேயில்லை. புலிகள் பிடித்தார்கள் சுட்டார்கள் என்று ஒரு சில நபர்கள்தான் பல பெயர்களில் எழுதித்தள்ளினார்கள் என்பதும் அதைவைத்து "முரண் அரசியல்", "புலிகளுக்கு முன் புலிகளுக்கு பின்" இப்படி பல மூலப்பெயர்களில் விவாதங்களையும் நடாத்தி தங்களை பெரிய அரசியல் மேதைகளாக காட்டிக்கொள்ள முயற்சித்த காமடிகளும் நடந்தேறின. இன்னமும் அதே சுரத்தில் அப்பப்போ வாசித்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். சரி இனி விடையத்திற்கு வருவோம்.

விடுதலைப்புலிகளின் அரசியற் பிரிவினரின் சில செயற்பாடுகளுக்கு கோபமடைந்திருந்த மக்கள் எவருமே புலிகளின் ராணுவ பிரிவுகளை குறை சொல்லியிருந்தது கிடையாது. தவிர வன்னிக்குள் இருந்து கட்டம் கட்டமாக போரினால் வெளியேறிய மக்கள் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் ஆயுத பிரசன்னங்கள் மக்களுக்கும் புலிகளுக்கும் இடையில் இருந்த "இராணுவ உறவு" குறித்து வாய்திறந்தது கிடையாது. யாரும் கேட்டாலும் அவர்கள் ஒருபோதும் சொல்லப்போவதும் இல்லை என்பது பேசிப்பார்த்தீர்களெண்டால் புரியும். ஒன்றில் தெரியாது என்று சொல்வார்கள் அல்லது பொய் சொல்வார்கள். இது யாவரும் (ராணுவம் ஒட்டுக்குழு வெளிநாட்டு புலனாய்வமைப்புகள் உள்ளிட்ட அனைவரும்) அறிந்த ஒன்று தான்.

இரண்டு சம்பவங்களை மாத்திரம் இங்கு பதிவுசெய்யலாம் என்று நினைக்கிறேன்.
கிளிநொச்சி பின்வாங்கலுக்கு பிறகு மக்களை புலிகளே கட்டம் கட்டமாக வெளியேற்றினார்கள். குறிப்பிட்ட கால இடைவெளிகளுக்குள் இது நடந்தது. "இன்று நாங்கள் பின்வாங்க போகிறோம்.. வருபவர்கள் வரலாம் அங்கால் போகிறவர்கள் போகலாம்.. போறதெண்டால் கவனமாக போங்கள்.. ஆமி அடிபட்டு கொண்டு வரேக்க இடம் மாற வேண்டாம்" இப்படி அறிவுறுத்தல்களை புலிகளே மக்களுக்கு வளங்கியிருந்தார்கள்.

குறிப்பாக சுதந்திரபுர பிரதேசத்தில் 10ற்கும் குறைவான போராளிகள் நூற்றுக்கணக்கான இராணுவத்தை 100 மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் 15 நாட்களுக்கு மேல் மறித்து வைத்திருந்திருக்கிறார்கள். அந்த போராளிகள் அங்கிருந்த மக்களை வெளியேறி விரைவாக செல்லும் படியும் இல்லாவிடில் சண்டைக்குள் மாட்டுப்பட வேண்டிவரும் என எச்சரித்தும் போராளிகளை விட்டு மக்கள் நகர மறுத்த விடையத்தை அந்த சம்பவத்தில் இருந்த ஒரு பெண் சொன்னார். பெடியளுக்கு சண்டை பிடிக்க சப்ளை காணாம தான் விட்டிற்று போனவங்கள் எண்டு சொன்னார்.

தங்களுக்கே சாப்பாடு செய்ய ஏலாம இருக்குமாம் பங்கருக்க வச்சு வெறும் மாவில ரொட்டி சுட்டுதான் சாப்பிட்டவர்களாம். இரவும் பகலும் மாறிமாறி பெடியள் படுறபாட்ட பாத்த பாவமா இருக்கும். இப்ப எங்கயோ தெரியா அவங்கள் என்று கண்கலங்கினார் அந்த பெண். "ஒரு பெடியன் விடிய அஞ்சு மணில இருந்து கிட்டதட்ட இரவு 7 மணிவரைகக்கும் இருந்த இடம் விட்டு நகராம சினைப்பரால போட்டுக் கொண்டே இருந்தான்" என்று சொன்வர் "தம்பி உந்த அரசியல் துறைல இருந்த சிலதுகள்தான் சனத்தோட பிரச்சினப்பட்டது. இப்ப யோசிக்கேக்க இவங்கள் முதலே காட்டிக்குடுக்க வெளிக்கிட்டிருப்பாங்களோ எண்டு டவுட்டா இருக்கு" என்று சொன்னார். 

தவிர காயப்படும் மக்களை பராமரிக்க சில வைத்தியர்களை தவிர பெரிய ஆளணியோ மருந்துப்பொருட்களோ இருந்கவில்லை. காயப்படும் போராளிகள் மக்கள் என அனைவரையும் வைத்தியர்கள் தாதிமார்களோடு விடுதலைப்புலிகளின் மருத்துவ பிரிவுதான் பராமரித்தது.

"காயப்பட்ட அத்தினயாயிரம் சனத்தையும் எப்பிடி பராமரிக்கிறது. இண்டைக்கு அங்க கொண்டுபோய் கிபிர் வந்து அடிச்சா திருப்பி வேற இடத்துக்கு கொண்டு போகோணும். இயக்க பெடியளும் பிள்ளையளும் எப்பிடி பாத்தாங்கள்.
காயப்படுற சனத்துக்கு மருந்த கட்டிற்று அடுத்தநாள் பாத்தா புண்ண சுத்தி புழு வந்திருக்கும். அதையெல்லாம் சுத்தப்படுத்தி திரும்பி மருந்து கட்டி பாவம் அவங்கள். சண்டைய பாக்கணோம்.. இதை பாக்கோணும். புதுசா இயக்கத்துக்கு கொண்டுவந்த பெடியள இதுகளுக்குதான் கூட விட்டிருந்தவங்கள்.. அதில இருந்து ஓட வெளிக்கிட்ட பெடியள் இந்த நிலைய பாத்திட்டு சனத்துக்கு உதவுற வேலைய செய்தவங்கள். காயப்படுறதெண்டா அப்பிடி இப்பிடி காயமில்லை.. சதைகள் எலும்புகள் எல்லாமே முறிஞ்சு தொங்கும்... இப்பிடி பட்ட நிலையிலயும் பதட்டமடையாம வேலை செய்யிறத்துக்கு அவங்களால மட்டும் தான் முடியும் தம்பி" என்று தனது கணவரையும் 1 பிள்ளையையும் பறிகொடுத்த தாய் ஒருவர் சொன்னார்.

இப்படி நிறைய இருக்கிறது. மக்கள் பேசமாட்டார்கள்.பத்திரிகைகளில் வரும் செய்திகளை மாத்திரம் படித்துவிட்டு அரசியல் வியாக்கியானம் செய்யும் "அவர்களின்" நோக்கம் இங்குள்ள அனைவருக்கும் தெரியும்.

இந்தியன் ஆமிக்கெதிரான சமர் தொடக்கம் பூநகரி தாக்குதல்(தவளைப்பாய்ச்சல்) முல்லைச்சமர் (ஓயாத அலைகள் 1) கிளிநொச்சி சமர் (ஓயாத அலைகள் 2, ஓயாத அலைகள் 3 சமர், மற்றும் தீச்சுவாலை முறியடிப்பு சமர் போன்ற பெரு வெற்றிக்களுக்கு பின்னால் நின்றவர்கள் இந்த மக்கள். இந்த சண்டைகளுக்கு பின்னால் மக்களின் பங்கு எப்படிப்பட்டது என்பதை பல தளபதிகளே சொல்லியிருக்கிறார்கள். ஏன் தலைவர் கூட சொல்லியிருக்கிறார்.

"புலிகளுக்கு முன் புலிகளுக்கு பின்" , "முரண் அரசியல்" என்று தமது சுயவிளம்பரம் அல்லது பொழுதுபோக்கிற்காய் விவாதம் செய்யும் இவர்களை விட இந்த மக்கள் இராணுவ நுணுக்கங்களும் அரசியல் தெளிவும் கொண்டவர்கள். அதனால்தான் விவாதங்களை விரும்பவில்லை.

"இயக்கத்தின்ர விசயங்கள் நாங்க ஆராய கூடாது என்ன செய்யோணும் எண்டு அவங்களுக்கு தெரியும்" என்று எனக்கு அறிவுறுத்தல் சொன்ன பெண்ணின் வயது 18 ..இரண்டு மாவீரர்களின் பள்ளி செல்லும் தங்கை.

ஆதி
13-06-2012

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP