Powered by Blogger.

Monday, January 31, 2011

#tnfisherman & இலங்கை மீனவர்கள்...

இந்த தலைப்பினூடு பல விடையங்கள் இன்று பதிவுலகத்தில் அலசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனது கண்ணோட்டத்தில் சில விடையங்களை பேசவேண்டும் என்று நினைக்கிறேன். இன்றுவரையான வரலாறுகளில் எப்போதும் போராட்டம் ஒன்று ஆரம்பித்த பிற்பாடு அதுபற்றிய எதிர்கருத்துகளை அல்லது விமர்சனங்களை சூழ்நிலை அறியாது செய்து தமது இருப்புகளை காட்டிக்கொள்ளும் பலர் இருந்து கொண்டே இருக்கின்றனர். ஆனால் அவர்களால் போராட்டம் ஆரம்பிக்க முன்னர் அது பற்றி எதுவும் தெரிவிக்கும் தைரியம் கிடையாது. இது தான் இன்று தமிழரின் விடுதலைப்போராட்டத்திலும் சரி தமிழக மீனவர்களின் உயிர்பற்றிய விழிப்பு போராட்டத்திலும் சரி நடந்து கொண்டிருக்கிறது.

போராட்டங்களின் தன்மையறியாது அதுபற்றிய விமர்சனங்கள் செய்வது போராட்த்தின் தேவை குறித்த செய்தி சமுதாயத்தில் குழப்ப நிலையில் இருக்க வைப்பதற்கான ஒரு நடவடிக்கையே தவிர போராட்டத்தின் குரலாக அமைய முடியாது.

இங்கு "இலங்கை மீனவர்கள்" என்று குறிப்பிடும் அனைத்து எழுத்தாளர்களிடமும் ஒன்று கேட்கிறேன்... இலங்கை மீனவர்களுக்கு பிரச்சினை என்று இதுவரை இலங்கை மீனவர் சங்கம் சொல்லியிருக்கிறதா??? இலங்கை மீனவர் சங்கம் என்பது தமிழர்+சிங்களவர்+முஸ்லிம் மீனவர்களை சேர்த்த அமைப்பு. இந்த அமைப்பு இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகள் அறுப்பது பற்றி பேசியிருக்கிறதா???முல்லைத்தீவு, அம்பாறை, திருகோணமலை, வடமராட்சி, வடமராட்சிகிழக்கு என தமிழ் மீனவர்கள் மீன்பிடிக்கும் இடங்களில் சிங்கள மீனவர்கள் அத்து மீறி படையினரின் உதவியோடு மீன்படிப்பதால் தமிழ் மினவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பேசியிருக்கிறதா??? இல்லை தமிழ் மீனவர்கள் காலி, மாத்தறை, கொழும்பு, ஹம்பாந்தோட்டை பகுதிகளில் மீன்பிடிக்க முடியும் என்றாவது கூறியிருக்கிறதா??? இங்கு தான் இலங்கை மீனவர்கள் என்ற பதம் தொலைந்து போகிறது. 
தமிழக மீனவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்று போராட்டம் நடந்து கொண்டிருக்க இலங்கை மீனவர்களின் வலையும் அறுக்கப்படக்கூடாது என குரல் எழுப்புவது உள்நோக்கு கொண்டதாகவே கருத வேண்டிக்கிடக்கிறது.
திரு லோஷன் அவர்கள் தன் பதிவில் " ஐந்நூறு பேர் இறந்த பிறகுதான் இத்தனை பேரின் கண்களும் விழித்தனவா?" (லோசன்)
என்று எழுதியிருக்கிறார்.இது தான் பிரச்சினை... முதலாவது தமிழக மீனவன் சிறிலங்கா படைகளால் சுட்டுக்கொல்லப்படும் போது எல்லோரும் கத்தினோம்.... அந்த குரல்கள் கேட்கவில்லை.... 500 வது மீனவன் சுட்டுக்கொல்லப்படும் போது கத்தும் குரல் கொஞ்மென்றாலும் கேட்க ஆரம்பித்திருக்கிறது அந்த வேளையில் தான் அறுபடும் வலைகள் குறித்த கேள்வியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் இருந்து வடமராட்சி வந்து சிங்களவனால் மீன்பிடிக்கப்படும் உரிமை வடமராட்சி மீனவனால் ஹம்பாந்தோட்டை போய் மீன்பிடிக்க இல்லை என்ற இலங்கை மீனவர்களிடையில் காட்டப்படும் உரிமை பிரச்சினை அறுக்கப்படும் வலைகள் விடையத்தால் மறைக்கப்படுகிறது.

இலங்கை தமிழ் மீனவனின் வலையை தமிழக மீனவன் அறுத்தாலும் சரி தமிழக மீனவனின் வலையை இங்கத்தைய மீனவன் அறுத்தாலும் சரி ஒருவரின் பிழைப்பை இன்னொருவன் இல்லாது செய்வதை அனுமதிக்க முடியாது அதற்கு மேல் கொல்லப்படுவதை எப்படி விபரிக்க முடியும்??? இதே எல்லயைில் மீன்பிடிக்கும் சீனனும், கொரியனும் உயிருடன் திரும்பிப்போகலாம் தமிழக மீனவன் மட்டும் சாகவேண்டும் என்பது என்ன நியாயம். தமிழன் என்பதால் மட்டும் தான் அவன் சுட்டுக்கொல்லப்படுகிறான் என்பது தான் எனது கருத்து. மருந்துகளை பாவித்து ஈழத்து மீனவளத்தை சீனன் கொத்துக்கொத்தாய் அள்ளிக்கொண்டு போவது எல்லோருக்கும் தெரிந்த விடையம். ஆனால் அப்பாவி தமிழ் மீனவர்கள் அத்து மீறி வந்தார்கள் என்று சுட்டுக்கொல்லப்படுவதும் அதற்கு சொல்லப்படும் நியாயமும் மிருகத்தனத்தைவிட மோசமானது.

தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுதை நிறுத்தும் அதேவேளை(ஒரே நேரத்தில்) இலங்கை மீனவர்களுக்கு தமிழகமீனவர்களால் வரும் பிரச்சினைகள் குறித்தும் பேச வேண்டும் என்பது போராட்டத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கை. இலங்கை அரசு  முதலில் தமிழ் மீனவனை சுட்டுக்கொல்வதை நிறுத்து வேண்டும். இலங்கையில் அந்தந்த மாவட்ட மீனவர்களை அந்தந்த மாவட்டங்களில் மட்டும் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் இல்லையெனின் எல்லோருக்கும் ஒரே சட்டம் பேணவேண்டும். எல்லாரும் எல்லா இடத்திலும் மீன்பிடிக்க முடியுமென்றால் இருந்து பாருங்கள் ஈழத்தமிழனின் பிணங்கள் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை கடல்களில் மிதக்கும். சிங்களவன் எப்போதும் தனது குணத்தோடு தான் இருப்பான். கடந்த மாதம் கூட வடமராட்சி..வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவு பகுதி கடல்களில் தமிழ் மீனவர்களின் வலைகள் சிங்களவர்களால் அறுக்கப்ட்டு ராணுவத்தினரால் விரட்டியடிக்கப்ட்டனர்.

முதலில் தமிழ் மீனவன் சுட்டுக்கொல்லப்படுவதை நிறுத்து. இலங்கை மீனவர்கள் என்று ஜக்கியம் பேணும் இலங்கையர்கள், இலங்கை தமிழ் மீனவனுக்கு, இலங்கை சிங்களவனுக்கு கொடுக்கப்படும் உரிமையை கொடுக்கச் சொல்லி ஒரு வரியாவது எழுதட்டும் பார்க்கலாம் (நாங்கள் எழுதினால் இனவாதிகள் என்ற சொல்லாடலில் அடக்கப்பட்டுவிடுவோம்).

ஆதி
1-2-2011

Tuesday, January 11, 2011

"செங்கடல்" தமிழர்களின் ரத்தத்தையும் உணர்வுகளையும் வைத்து நடாத்தப்படவிருக்கும் அடுத்த வியாபாரம்.

புலி எதிர்ப்பு ஆதரவாளர்களால் இயக்கப்ட்ட "செங்கடல்" திரைப்படம்,சிறிலங்கா அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருப்பதால் தணிக்கை குழுவின் தடைவிதிக்கப்ட்டடுள்ளது என்ற பிரச்சாரம் விளம்பர நோக்கமுடையது. சிறிலங்கா அரசுக்கு எதிராக கண்டனம் செய்யமுடியாது என மைக்கைப் பிடுங்கியவர் சிறிலங்கா அரசுக்கு எதிரான கருத்தோடு படம் செய்துள்ளார் என்ற பிரச்சாரம் ஈழத்தமிழரிடத்தில் எடுபடாது. எப்படி தான் படம் இருந்தாலும் விடுதலைப்புலிகள் மீதான அவர்களின் காழ்ப்புணர்வு அந்தப்படத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..


"செங்கடல்" திரப்படம் பற்றிய பேச்சிற்கு சில தமிழ் இணைய தளங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. யார் செய்தி எழுதிப்போட்டாலும் அதன் பின்னணி பற்றி அறியாமல் அப்படி செய்தியை பிரசுரிக்கும் சில பொறுப்பற்ற இணையங்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. இந்திய "றோ" அமைப்புடன் உறவு பேணிவரும் சில ஈழசெய்தி இணையங்கள் இந்த தவறை மீள மீள செய்து வருகின்றன.


இந்த திரைப்படத்தை பொறுத்தவரை இதை இயக்கிய லீனா மேகலை மற்றும் அவருடன் பணியாற்றிய ஷோபா சக்தி என்ற இருவரும் தமிழ்மக்களுக்கு தமிழீழம் தேவையில்லை என்ற கருத்தை எழுத்துகளினூடாக விதைத்து வருபவர்கள்.தமிழீழ போராட்ட தார்ப்பரியத்தை பக்கச்சார்பாக விமர்சித்து வருபவர்கள்.  தமிழீழ மக்கள் கொத்துக்கொத்தாய் பிணங்களாக சிறிலங்கா அரசால் கொன்றுகுவிக்கப்ட்ட பின் புலிகளுக்குபின் புலிகளுக்கு முன் என்று அர்தமற்ற அரசியல் எழுதி வியாபாரம் பெருக்கிறவர்கள். உச்சக்கட்ட போர் நடந்து  கொண்டிருந்த வேளையில் போரை நிறுத்தக்கோரி நடாத்தப்பட்ட மாபெரும் பேரணி ஒன்றில் சிறிலங்கா அரசையோ இந்திய அரசையோ கண்டிக்கும் வகையில் பேசக்கூடாது என்று ஒலிவாங்கியை பிடுங்கி எடுத்தவர்தான் லீனாமேகலை.


விடுதலைப்புலிகளை எழுத்து நாகரிகமற்று, நடுநிலையற்று விமர்சிக்கும் இவர்கள் ஒருபோதுமே ஈழத்தமிழ் மக்களின் சுயாட்சி நிலைகுறித்து பேசியது கிடையாது. சிங்கள அரசோடு இரண்டாம் தரப்பு மக்களாக வாழ்வதே சாலச்சிறந்தது என்று எழுதி எழுதி தலையால் தண்ணி குடித்துக் கொண்டிருக்கும் இவர்கள் சிறிலங்கா அரசை விமர்சிக்கும் திரைப்படத்தை எடுத்திருக்க வாய்ப்புகள் குறைவு. அப்படியே பேசியிருந்தாலும் திரைப்படத்தின் மூலம் தமிழீழத்திற்கான போராட்டத்தால் தான் இவை நடந்தது என்று கூறி மக்கள் விடுதலைப்போராட்டத்தின் மீது பழி போடப்படுவதாயே இருக்கும் என்பது அவர்களின் கடந்த கால படைப்புகளில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்.


தமிழீழ மக்களின் விடுதலை குறித்து எந்த அக்கறையுமற்று வெறுமனே வியாபார நோக்கத்திற்காக இலக்கியம் செய்யும் இவர்கள் தமது வருவாய்க்காய், விளம்பரத்திற்காய் தமிழீழ மக்களின் வேதனைகளை தமது படைப்புகளின் இணைத்துக்கொள்வது அருவருக்கத்தக்கது. ஈழத்தமிழ் மகள் தமிழ் நாட்டு பொலிஸ்காரனால் கற்பழிக்கப்டதற்கு கூட எந்தவொரு கண்டன நிலைகளையும் தமது தளங்களில் பேசாத இந்த பெண்ணிய வாதிகளின் பின்புலமும் வெறுக்கத்தக்கதாக கூட இருக்கலாம். பரவாயில்லை அதை விடுவோம்.


இந்த திரைப்படம் தணிக்கை குழுவிற்கு சென்று சில தடைகளை சந்தித்த போது "பெண்ணால் இயக்கப்ட்ட படம்... இதற்கு தடைவிதிக்கப்படுவதானது ஆணாதிக்க போக்கு" என அர்த்தமற்ற வகையில் ஆதரவு தேட நினைத்த போது அது மிகுந்த பலனளிக்கவில்லை. அதனால் தான் இந்த தமிழீழ போராட்ட எதிர்பாளர்கள் இந்த திரைப்படம் "சிறிலங்கா அரசிற்கு எதிரான கருத்துகளை" கொண்டிருப்பதாக பொய்பிரச்சாரம் செய்து படத்திற்கான இலவச விளம்பரம் செய்கிறார்கள்.


ஒரு இனத்தின் விடுதலை உணர்வுகளை பேசுவதாக கூறி செய்யப்படும் வியாபாரம் அவர்களது உச்சக்கட்ட ஈனத்தனத்தையே காட்டும். 
இறுதியாக ஒன்றை மட்டுமே சொல்லிக் கொள்ள முடியும்... "செங்கடல்" திரைப்படத்தை இயக்கும் குழு தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் எதிரானது. இதற்கு சான்று அவர்களின் கடந்த கால வியாபார இலக்கியங்கள். இவர்கள் சிறிலங்கா அரசை திரைப்படத்தில் விமர்சித்திருந்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப்புலிகளையும் விமர்சித்து அது தேவையில்லை என்ற வகையிலும் பேசியிருப்பார்கள். அதனால் இது குறித்த பார்வை வாசகர்களை சார்ந்தது.


ஆதி
12-01-2011

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP