Powered by Blogger.

Tuesday, October 4, 2011

அவுஸ்ரேலியா வரவிருக்கும் மகிந்த


அக்டோபர் மாதமளவில் மகிந்த ராஜபக்ஷ அவுஸ்ரேலியா வரவிருப்பதாக அறியப்படுகிறது. தன் நாட்டு சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கும் ஒரு அரச  தலைவர் மகிந்த ராஜபக்ஷ என்பதற்கப்பால் இந்த நூற்றாண்டில் மனித குலத்திற்கு எதிராக பாரிய அளவிலான உரிமை மீறல்களையும் பயங்கரவாதங்களையும்  மேற் கொண்ட ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களுக்கெதிராக திட்டமிட்ட வகையில் பாரிய படுகொலைகளை செய்து முடித்த மகிந்தராஜபக்ஷ அது குறித்த விசாரணைகளுக்கும் எதிர்ப்பு  தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது. போர்க்குற்ற ஆதாரங்கள் பல வழிகளிலும் வெளிவந்த வண்ணம் இருக்க சனல் 4 இன் போர்க்குற்றம் தொடர்பான  ஆவணப்படம் மேலும் சிறிலங்கா அரசின் இனப்படுகொலை குறித்த ஆதாரத்தை வலுவாக்கியுள்ளது. அய்.நாவின் நிபுணர்குழு அறிக்கையின் பிரகாரம் சிறிலங்கா  அரசு திட்டமிட்ட வகையில் இனப்படுகொலையை நடாத்தி முடித்திருப்பது புரியும்.

மனித நேயம் மற்றும் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடுகளுக்கு சென்று தன்னை ஒரு நிரபராதி என்று வெளி உலகிற்கு காட்டுவதற்கு சிறிலங்கா  அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ பல வழிகளிலும் முயன்று வருகிறார். இதை தமிழ் மக்கள் சாதகமாக பயன் படுத்தி மனித எனத்திற்கு எதிரான தமிழ்  மக்கள் மீது இனப் படுகொலையை நடாத்தி முடித்த நபர்தான் இந்த சிறிலங்கா அரச தலைவர் என்பதை உலகத்திற்கு சொல்ல வேண்டும். தமிழ் மக்கள் மீது பாரிய  அளவிலான இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்திருக்கிற ராஜபக்ஷ தலமையிலான அரசு இன்று தமிழ் மக்களை ராணுவ மயப்படுத்தப்பட்ட நிர்வாகத்திற்குள்  உரிமை மறுப்புகளோடு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

தமிழரர் தாயகப்பகுதியில் அனைத்து சிவில் நிர்வாகங்களும் ராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதோடு தமிழ் மக்கள் மீது பாரிய குற்றச் செயல்கள் கட்டவிழ்த்து  விடப்பட்டுள்ளது. தாங்கள் நினைத்தபாட்டிற்கு சிவில் நிர்வாகத்தையும் கட்டுப்படுத்தி முடக்க கூடிய அளவிற்கு ராணுவத்திற்கும் துணை ராணுவ குழுக்கழுக்கும்  அதிகாரங்களை வழங்கியிருக்கிறது மகிந்தராஜபக்ஷ அரசு.

இப்படிப்பட்ட மகிந்தராஜபக்ஷ தான் இந்த மாதம் அவுஸ்ரேலியாவரவிருக்கிறார். கடந்த முறை லண்டன் சென்ற மகிந்தராஜபக்ஷவை தமிழ் மக்கள் சட்டரீதியில்  அவரை அச்சுறுத்தி நாட்டைவிட்டு வெளியேற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டிய அவுஸ்ரேலிய தமிழர் அமைப்புகள்.
அவுஸ்ரேலியாவரவிருக்கும் மகிந்த ராஜபக்ஷ யார் என்பதை சர்வதேசத்திற்கு மீண்டும் ஒருமுறை உரத்து சொல்ல கூடிய சந்தர்ப்பமாக இதை தமிழ் மக்கள்  பயன்படுத்த வேண்டும். அவுஸ்ரேலிய சட்டவரையறைக்குள் போர்க்குற்றவாளிமேல், மனித குலத்தின் மீது பாரிய குற்றச் செயல்களை புரிந்தவர்கள் மேல்  எப்படியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பதை ஆராய்ந்து விரைவாக செயற்பட வேண்டும். மகிந்த  அவுஸ்ரேலியா வரவிருக்கும் திகதி நேரம்  என்பவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மக்களை விரைவாக ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழினத்தின் மீது இனப்படுகொலையை  செய்த மகிந்த ராஜபக்ஷ தண்டனை பெறும்வரை தமிழ் மக்கள் சும்மா விடப்போவதில்லை என்பதை சர்வதேசத்திற்கும் மகிந்த ராஜபக்ஷவுக்கும் மீண்டும்  ஒருமுறை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கெதிராக நடந்த இனப்படுகொலை குறித்து அவுஸ்ரேலிய மக்களுக்கு தெளிவுபடுத்தக் கூடிய சந்தர்ப்பம் இது. மகிந்தராஜபக்ஷ அரசை  ஏன் நிராகரிக்கிறோம் என்பதையும் அவுஸ்ரேலிய அரசு இந்த இனப்படுகொலையாளிக்கு தண்டனை ஏன பெற்றுத்தரவேண்டும் என்பதையும்  தெளிவுபடுத்தக் கூடிய சந்தர்ப்பமாக நாங்கள் இதை பயன்படுத்த வேண்டும். ஒன்றுபட்ட தமிழினமாக போர்க் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தரக் கோரி  அவுஸ்ரேலிய அரசிடம் கேட்க  வேண்டும்.

தமிழர் அமைப்புகள் சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்து அவுஸ்ரேலியாவில் மனிதஉரிமை மீறல் குற்றவாளிக்கு போர்க்குற்றவாளிக்கு எப்படியான சட்ட அழுத்தங்களை கொடுக்க முடியும் என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மகிந்த ராஜபக்ஷவின் நகர்வுகளுக்கேற்றவாறு தமிழ் மக்கள் முற்றுகைகளை செய்ய வேண்டும்.

லண்டனில் இருந்து தமிழின படுகொலையாளி மகிந்த ராஜபக்ஷ வெளியேற்றப்பட்டது போல் அவுஸ்ரேலியாவிலும் நடக்க வேண்டும் என்பதே அனைத்து தமிழ் மக்கிளினதும் எதிர்பார்ப்பு.

ஆதி
30-09-2011

Sunday, October 2, 2011

அடக்குமுறையில் சிக்கித்தவிக்கும் தமிழர் தாயகம்


தமிழர்கள் மீது இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்த கையோடு தமிழர் தாயகப்பகுதியை அடிமைப்படுத்தும் பல வேலைத்திட்டங்களை அரசு முன்னெடுத்துவருகிறது. ஈபிடிபி போன்ற துணை ராணுவ குழுக்கள் மற்றும் ஜனாதிபதியினால் நேரடியாக நியமிக்கப்படும் அரச அதிகாரிகளினூடாக அடக்கு முறையின் வடிவங்களை பன்முகப்படுத்தியுள்ளது அரசு. பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்ட்டாலும் மேலதிக அதிகாரங்களை ராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் வழங்கியுள்ள அரசாங்கம் தமிழர் தாயகப்பகுதியில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் அளவுக் மீறிய வகையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு அதிகாரமும் வழங்கியுள்ளது.

அரச புலனாய்வுப்பிரிவினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு "கிறிஸ் மனிதர்கள்" என்ற பெயரில் தமிழர் தாயகப்பகுதிகளில் செய்த அடக்குமுறைகள் உச்சத்தை எட்டியிருந்தது. பல்கலைக்கழக மாணவிகளின் விடுதிக்குள் நுழையுமளவிற்கு அவர்களின் சேட்டைகள் உச்சம் பெற்றிருந்தன. பொதுமக்களால் பிடிக்கப்பட்ட "கிறிஸ் மனிதர்கள்" எனப்படும் நபர்கள் அனைவரும் சிங்களவர்கள் என்பதோடு அவர்கள் எவரையுமே நீதிமன்றில் பொலிசார் ஆயர்ப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பாலியல் மனநோயாளிகள் என்று கூறி தமிழ்மக்களை மடையர்களாக்கியது சிங்கள அரசு. "கிறிஸ் மனிதர்கள்" எனப்படுபவர்கள் வரும் இடங்களிலெல்லாம் மிக விரைவாகவே ராணுவம் வந்து அவர்களை காப்பாற்றிவிடுவது மட்டுமல்லாது பொதுமக்களையும் மிலேச்சத்தனமாக தாக்கிவரும் சம்பவங்களும் உச்சத்தை எட்டியிருந்தன. இந்த விடையத்தை இலங்கை வந்திருந்த அமெரிக்க அதிகாரி பிளேக்கிடம் எடுத்து சொல்லப்ட்டதன் பிற்பாடு சற்று தணிந்திருக்கிறது.

இப்படியான வன்முறைகளுக்கு பின்னணியில் ராணுவம் இருப்பது தெரிந்தும் யாழ் அரச அதிபர் ராணுவத்தின் மீது எந்த கண்டனத்தையோ அல்லது விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றோ சொல்லாமல் "கிறிஸ் மனிதர்கள்" என்ற சம்பவங்களே யாழ்ப்பாணத்தில் நடைபெறவில்லை என்று கருத்துக் கூறியிருந்தார்.

தமிழர்களின் பாரம்பரியங்களை சிதைப்பது மட்டுமல்லாது தமிழர்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்று சின்னங்களையும் சிதைத்தழிப்பதில் அரசு மும்மரமாக ஈடுபட்டுவருகிறது. சின்ன சின்ன கோயில்களை இடித்தழித்தல் அந்த இடத்தில் புத்தர் சிலையை வைத்தல் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் ராணுவ செறிவை அதிகரித்தல் பொதுமக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு ராணுவத்தின் பிரசன்னம் என மக்கள் திருப்பி பேச முடியாத அளவிற்கு அடக்குமுறையின் வடிவங்கள் உருவாக்கப்ட்டுவருகின்றன.

போரால் பாதிக்கபட்ட பெண்களை அச்சுறுத்தல் பள்ளி மாணவிகளுடன் சேட்டைவிடுதல் என ராணுவத்தின் அடாவடித்தனங்கள் நாழுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள இளைஞர்கள் தாராளமாக தமிழ் பெண்களுடன் சேட்டைவிடுதல் தமிழ் இளைஞர்களுடன் தகராறுகளில் ஈடுபடல் என நாழுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து எங்கும் முறைப்பாடுகளை செய்ய முடியாத நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அனுராதபுரத்தில் இருக்கும் "பன்சலை" ஒன்றிற்காக யாழ்ப்பாண கடைகளில் பிக்கு ஒருவர் கட்டாய காசுபறிப்பில் ஈடுபட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது. தான் பொலிஸ் அனுமதி பெற்றுள்ளதாகவும் ரிக்ட்டின் விலை 1500 ரூபாய் எனவும் கட்டாயம் அனைவரும் வாங்க வேண்டுமெனவும் இந்த கொள்ளை பட்டப்பகில் நடைபெற்றுள்ளது. தனிச் சிங்களத்தில் அச்சிடப்பட்ட ரிக்கட்டுகள் வியாபாரிகளிடம் கொடுக்கப்ட்டுள்ளது.

சிங்கள இனத்தை சேர்ந்த யார் வேண்டுமென்றாலும் தமிழர்கள் மீது அதிகாரம் செலுத்தலாம் என்ற அடக்குமுறை வடிவத்தை நசுக்காக தமிழர் தாயகப்பகுதிக்கு நகர்த்தியிருக்கிறது சிங்கள அரசு. தமிழ் மக்களின் சிவில் பிரச்சினை குறித்து எந்த அக்கறையும் காட்டிக் கொள்ளதா ஈபிடிபி துணை ராணுவக் குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தனது அதிகாரத்தை பயன்படுத்தி தென்னிலங்கை வர்த்தகர்களுக்கு யாழில் களம் அமைத்து கொடுப்பதில் மும்மரமாக ஈடுபட்டவண்ணம் உள்ளார். மாநகர சபைகளின் செயற்பாடுகளை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இவர் ஊழலும் தனது சுய வியாபாரத்தையும் செய்வதற்கான ஒரு வழியாகவே மாநனகர சபைகளை பயன்படுத்துகிறார்.

மக்கள் கேள்வி கேட்ட முடியாத நிலைக்கும் நீதிமன்றங்கள் செல்ல முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். வெளியில் தெரியாத வகையில் அடக்முறைகளின் பயங்கரம் தலைவிரித்தாடுகிறது.

புலம்பெயர் தமிழர்களே!!
ஈழத்தில் நடந்து கொண்டிருக்க கூடிய அடக்குமுறையின் இப்படியான வடிவங்கள் குறித்து நீங்கள் மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் ராஜதந்திரிகளுக்கு தொடர்ந்து தெளிவுபடுத்திக் கொண்டிருங்கள். மின்னஞ்சல்கள் அனுப்புங்கள். ஈழத்தில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகள் மற்றும் இணைய செய்திகளை வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு அனுப்பிக் கொண்டிருங்கள். ஈழத்தில் இருக்க கூடிய உங்கள் சொந்தங்களுடன் பேசும் பொழுது அரசியல் நிலவரம் குறித்தும் அறிந்து கொள்ளுங்கள். ஈழத்தில் இருக்கும் மக்கள் அடக்குமுறைக்குள் இருக்கிறார்கள். எது குறித்தும் வாய்திறக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். புலம்பெயர் தமிழர்கள் தான் தமிழ்மக்களின் நிலவரம் குறித்து ராஜதந்திகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் அத்தனை சந்தர்ப்பங்களையும் சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்ட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளும் உரிமை மறுப்புகளும் தொடர்ந்து சர்வதேசத்திற்கு தெரிவதோடு ஆக்க கூர்வமான நடவடிக்கைகளை எடுக்க தூண்டும். சிறிலங்கா அரசு தண்டிக்கப்பட வேண்டிய அரசே தான் என்ற நிலை உருவாகும். தமிழ் மக்களின் விடுதலை சாத்தியமாகும்.

ஆதி
01-10-2011



Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP