Powered by Blogger.

Friday, October 25, 2013

கூட்டமைப்பு அரசியல் யாருக்கு அஞ்சுகிறது!!! # மக்கள் தடைகளை உடைத்தெறிவார்கள்

வடமாகாண தேர்தலுக்குப்பின் வடக்கைப் பொறுத்தவரை மக்களின் நடவடிக்கைகளில் பெருமளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக மாவீரர்கள் மற்றும் சுயநிர்ணய உரிமை தொடர்பாக மக்கள் திடுக்கிட்டு விழித்ததைப்போல் விழித்திருக்கிறார்கள்.

தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இல்லாது செய்யபட்டபின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் நிழலில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டனர். விடுதலைப்புலிகள் இல்லாத நிலையில்நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் ஜனாதிபதித்தேர்தலை மக்கள் சந்தித்திருந்தாலும் வடமாகாணத் தேர்தல் என்பது வடக்கைப்பொறுத்தவரை மக்களை உசாரடையச்செய்திருக்கிறது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நரித்தனமான அரசியல்

இதுவரைகாலமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது தாங்கள் செய்யும் அரசியலை மக்களிடம் சொல்லியது கிடையாது. கிழக்குமாகாணத் தேர்தலில் " தேர்தல் புறக்கணிப்பு" கருத்து பரவலாக மக்கள் மத்தியில் காணப்பட்ட நிலையில் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளை வைத்து தேர்தல் பிரச்சாரம் பெருமளவில் முடக்கிவிடப்பட்டிருக்கவில்லை. அது போக கிழக்கு மாகாண அதிகாரத்தை முஸ்லிம்காங்கிரஸ் உடன் சேர்ந்து கைப்பற்றுவது தான் என்று சம்மந்தர் தலமையிலான குழு திட்டமிட்டு செயற்பட்டிருந்தாலும் இறுதி நேரத்தில் சலுகைகளுக்காக முஸ்லீம் சமூகம் காட்டிக்கொடுக்கப்பட்டது வரலாற்றில் எழுதப்பட்டுவிட்ட பெரும் கதை.

தவிர கிழக்கு மாகாண தேர்தலைப்பொறுத்தவரை ஒப்பீட்டளவில் பெருமளவான தமிழ் மக்கள் புறக்கணித்திருந்தார்கள் என்பதுதான் உண்மை.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்னமாதிரியான அரசியலை செய்கிறது என்று இதுவரை மக்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டவும் இல்லை அது சம்மந்தமான பொதுக்கூட்டங்களும் நடாத்தப்பட்டவில்லை.

தேர்தல் விஞ்ஞாபத்தில் ஒரு விதமாகவும் கொழும்பு மற்றும் இந்தியாவுடன் இன்னொருமாதிரியாகவும் நரித்தனமான தமிழ்மக்களுக்கு வாழ்நாள் சிறையாக வரக்கூடிய நரித்தனமான அரசியலை சம்மந்தன் குழுவினர் செய்கின்றனர் என்ற சந்தேகம் பலமாகவே எழுந்திருக்கிறது. 

கூட்டமைப்பை மீண்டும் தக்கவைத்த புலிகள்

இந்த நிலையில் வடமாகாண தேர்தலைப்பொறுத்தவரை இறுதிக் கணம் வரை மக்கள் மாகாண அரசியலில் எந்த அக்கறையுமற்று இருந்ததைதே காண முடிந்தது.  மக்கள் எதற்காக இந்த மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட கூட்டமைப்பு அரசியல் தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்து பகிரமங்கமாக மேடைகளில் பேசுவதற்கு தீர்மானித்தது. மாவீர்ரகளுக்கான வீர வணக்கங்கள் செலுத்தப்பட்டன.

இந்த நிலையில் தான் மக்கள் தேர்தலில் எப்படியாவது வாக்களிக்க வேண்டும் என்ற நிலைக்குஉளவியல் ரீதியாக தள்ளப்பட்டனர்.

மக்களின் மாற்றங்கள்.

நீண்டகாலத்திற்கு பிறகு தமிழீழ மண்ணில் மாவீர்ரகளுக்கு வீரவணக்கம் பகிரங்கமாக செலுத்தப்பட்டது மக்களை பொறுத்தவரை இழந்த ஏதோ ஒன்றை திரும்ப பெற்றுவிட்டடோம் என்பது போன்றதான உணர்வு பொங்கி எழுந்திருக்கிறது.

விடுதலைப்புலிகள் தங்களை பாதுகாக்க வருவார்கள் போன்றதான ஒருவித வீராப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

பொது இடங்களில் புலிகளைப் பற்றி பேசுவது சட்டத்திற்கு முரணானது அல்ல என்ற சட்ட வெளிகள் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்தின் பின் மக்களுக்கு புலப்பட்டிருக்கிறது. ஆகக்குறைந்தத அரசியல் தீர்வாக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி பற்றி மட்டும்தான் பேச முடியுமே தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்க கூட முடியாது என்ற அரசியல் பார்வை மக்களிடத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.


கூட்டமைப்பின் அரசியல் யாருக்கு அஞ்சுகிறது!!!

சிறிலங்கா இராணுவம் செய்யும் அத்துமீறல்களுக்கு எதிராக நேரடியாக களத்தில் இறங்கி போராட்டங்களை செய்ய மக்கள் தயார் நிலையில் இருப்பது போன்றதான சலசலப்புகள் பரவலாக எல்லா இடங்களிலும் புலப்படுகிறது.

அண்மைக்காலங்களில் சில பிரதேச சபைகளில் (சாவகச்சேரி மற்றும் கரைச்சி) மாவீரர் துயிலுமில்ல புணரமைப்புக் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிரதேச சபை உறுப்பினர்கள் எனப்படுபவர்கள் மக்கள் மத்தியில் இருக்கும் சராசரி மனிதர்களே. கிராம மக்களுடன் நல்லது கெட்டதுகளில் பங்கேற்கும் சராசரி மனிதர்கள் தான் பிரதேச சபை உறுப்பினர்களாக இருக்கிறார்கள். (மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சராசரிபொதுவாழ்வில் இருந்து சற்று விலகியிருப்பவர்கள்).

பிரதேச சபைஉறுப்பினர்களின் தீர்மானம் என்பது அரசியல் தலமைகளால் ஆலோசிக்கபட்டு பிரேரிக்கபட்டதல்ல. அது அந்தந்த உறுப்பினர்கள் வாழும் கிராம மக்களின் விரும்பம் தான் தீர்மானமாக நிறைவேற்றபடப்டது என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பழுத்த தலைகளுக்கு தெரியும். இருந்தாலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் செல்வாக்குச் செலுத்தும் புறக்காரணிகளுக்காக இன்று தீர்மானத்திற்கும் தமக்கும் சம்மந்தம் இல்லை என்கிறார்கள்.

மக்களே தாங்கள் போராட தயாராக இருக்கும் போது, வீதிக்கு இறங்க தயாராக இருக்கும் போது கூட்டமைப்பின் அரசியல் எதற்கு அஞ்சுகிறது??

கரைச்சிப்பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து கிளிநொச்சியில் இருந்த பல மாவீரர் நினைவகங்களை மக்கள் துப்பரவு செய்துவிட்டார்கள். உருமறைப்புச் செய்து அதற்கான மரியாதையுடன் வைத்திருக்கிறார்கள்.

கனகபுரம் மாவீர்ர துயிலுமில்லத்தை துப்பரவு செய்வதற்காக விளக்குமாறு, மண்வெட்டி, கத்தி, கோடாரி, குப்பைவிறாண்டி என பல ஆயுதங்களுடன் சனம் தயாரான செய்தி சம்மந்தர் தலமையிலான கூட்டமைப்பினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

மக்களைப்பொறுத்தவரை "ஒருத்தன் செய்தா குற்றம் அதையே நூறுபேர் சேர்ந்து செய்தா போராட்டம்" என்ற நிலையில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அரசியல் வழிகாட்டிகளாகவும் சட்டத்தையும் சட்டத்தால் எப்படி எப்போது தோற்கடிக்கப்படுவோம் என்பதையும் சரியான முறையில் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் அரசியல் தலைவர்(கள்) இருந்தால் இன்று வடபகுதியென்ன கிழக்கிலும் மக்கள் வீதிக்கிறங்கி பெரும் செய்தியை சர்வதேசத்திற்கு கொடுக்க தயாராகவே இருக்கிறார்கள்.

கூட்டமைப்பை அச்சுறுத்தும் சக்தி எது என்பதை மக்களிடம் நேரடியாக பேச வேண்டும். கூட்டமைப்பு எவ்வாறான பேச்சுக்களில் ஈடுபடுகிறது என்பதை மக்களிடம் நேரடியாக தெளிவுபடுத்த வேண்டும்.

சம்மந்தர் தலமையிலான சில குழுவினர் அடிவருடித்தனமான அரசியலை செய்கிறார்கள் என்று நினைக்கும் பட்டத்தில் மக்கள் பாராளுமன்றம் அனுப்பிய மற்றையவர்கள் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் அரசியலில் இருந்து விலகி இந்தியா மற்றும் கனடாவில் இருக்கும் தத்தம் குடும்பங்களுடன் இணைந்து குடும்ப வாழ்வில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

மக்களைப்பொறுத்தவரை விடுதலைதான் முக்கியம். அதற்காக எந்தப் போராட்டத்தையும் செய்ய தயாராகவே இருக்கிறார்கள். புலிகள் இல்லாத இந்த நிலையில் சரியான வழிகாட்டலுடன் மக்களை போராடச் செய்ய வேண்டியது தமிழீழ மக்களுக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது.


ஆதி
26-10-2013

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP