Powered by Blogger.

Friday, December 26, 2014

த.தே.ம.முன்னணியின் வேலைத்திட்டமற்ற தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கை

2015 ஜனவரி மாதமளவில் நடைபெற இருக்கும் "சிறிலங்கா" ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் படி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து புறக்கணிப்பு பற்றிய விவாதங்கள் "இணையதள" மற்றும் "இலத்திரனியல்" ஊடக மட்டத்தில் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சமகால அரசியல் போக்கு,வடக்கு கிழக்கு மக்களின் நீண்டகால அரசியல் மற்றும் எதிர்கால அரசியல் நோக்கம் என்பவற்றை பொதுமகனாக ஆராய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

த.தே.ம.முன்னணியின் தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கையும் அதனையொட்டி அவர்கள் சொல்லும் காரணமும் முன்னுக்கு பின் முரணானது மட்டுமல்லாது நீண்டகால நோக்கமற்றதுமாகும்.

த.தே.ம.முன்னணி சிறிலங்கா அரசியல் பதியப்பட்ட கட்சியாக இருப்பது மட்டுமன்றி 2010ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நின்று மக்களால் புறக்கணிக்கபட்ட கட்சியுமாகும். 2010ம் ஆண்டு சிறிலங்கா பாராளுமன்ற தேர்தலில் நின்ற கட்சி 2015ம் ஆண்டு சிறிலங்கா தேர்தலை புறக்கணிக்கும்படி கோரி நிற்கிறது. அதாவது இடைப்பட்ட நான்கு வருடங்களுக்குள் சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசியலில் எந்த பிரயோசனமும் இல்லை என்ற முடிவிற்கு த.தே.முன்னணி வந்திருக்கலாம். எதர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் சிறிலங்கா அரசியல் பதியப்பட்டிருக்கும் தமது கட்சியை கலைத்துவிட்டு பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்கும்படி த.தே.ம.முன்னணி கோருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வேலைத் திட்டங்களற்ற த.தே.ம.முன்னணி

2010 இல் த.தே.ம.முன்னணி மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னர் தமது அரசியல் தொடர்பான விளக்கங்களை நியாயப்பாடுகளை இதுவரை மக்களுக்கு நேரடியாக சென்று சொல்லவில்லை. சில ஆர்ப்பாட்டங்களை செய்ததைத்தவிர த.தே.முன்னணி இதுவரை எந்த கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து அரசியல் பணிகளை முன்னெடுத்திருக்கிறது?

உதாரணத்திற்கு 2015 தேர்தலை புறக்கணிக்கும்படி இலத்திரனியல் ஊடகங்கள் ,சமூக வலைத்தளங்களில் மற்றும் புலம்பெயர் ஊடகங்களில் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு தமிழ் வாக்காளர்களை சந்தித்து
1) ஏன் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்?
2) தேர்தல் புறக்கணிப்பால் ஏற்படக்கூடிய நன்மை என்ன?
3) தேர்தல் வாக்களிப்பால் ஏற்படப்போகும் பாதகம் என்ன?
என்பது குறித்தான விளங்களை கொடுக்கவில்லை.

25 லட்சத்திற்கும் அதிமாக காணப்படும் தமிழ் வாக்களர்களுக்கு தாம் ஏன் தேர்தலை புறக்கணிக்கும்படி கோருகிறோம் என்ற விளக்கத்தை நேரடியாக மக்களிடம் சென்று சொல்லக்கூடிய வேலைத்திட்டமோ, ஆழுமையோ த.தே.முன்னணியிடம் காணப்படுவதாக தெரியவில்லை.

பல கிராமப் புற மக்களுக்கு த.தே.முன்னணியின் உறுப்பினர்கள் யாரென்றே தெரியாது. இந்த நிலமையில் தேர்தல் புறக்கணிப்பிற்கான விளக்கம் எப்படி மக்களை சென்றடையும்.

பிரயோசமன்ற தேர்தலும் பிரயோசனமான நோக்கங்களும்

"எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன்" என்ற கொள்கையை "அரசியலில்" (போராட்டத்தில் அல்ல) மிக நாசுக்காக பிரயோகித்தே ஆக வேண்டும். இன்றுவரை சிறிலங்கா அரசு பல இடங்களில் தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு அந்த கொள்கையைத்தான் பிரியோகிக்கிறது. இந்த கொள்கையானது நீண்டகால நிவாரணமாக இல்லாதுவிடினும் மக்களின் அரசியல் சிந்தனைகளுக்கு உத்வேகம் ஊட்டக்கூடிய முறையில் அமையலாம்.

கடந்த தேர்தலில் சரத்பொன்சேகா வெற்றியீட்டியிருந்தாலும் தமிழ் மக்கள் மீதான அழிப்பு தொடர்ந்திருக்க தான் போகுது. போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் இனப்படுகொலை குற்றவாளிகளுக்கான தண்டனை என்பவற்றை இந்தியா தடுத்திருக்கதான் போகுது. ஆனால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்கும் சரத் பொன்சேகாவிற்கு போனதால் சரத் பொன்சேகா மேல் இராஜபக்ச தரப்பில் வெறுப்பு உண்டானது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

கடந்த தேர்தலில் தமிழீழ மக்களின் வாக்கு செல்வாக்குதான் இன்று சிங்கள கட்சிகள் சுக்கு நூறாக உடையக் கூடிய வழியை ஏற்படுத்தியிருக்கிறது என்பது அரசியல் அறிவாளிகளுக்கு புரியாத ஒன்றல்ல.

குழம்பியிருக்கும் குட்டையில் நாங்களும் கையை வைத்து கலக்குவதுதான் சிறந்தது.

தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கைக்கு பின்னால் ஆக்கபூர்வமான வேலைத்திட்டம் இருக்குமென்றால் அதை மக்களுக்கு விளங்கப்படுத்தி அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து வெறுமனே ஊடக மட்டத்தில் பரபரப்பிற்கா அரசியல் செய்வதென்றால் தொடர்ந்து மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய நிலை வந்து கொண்டே இருக்கும்.

இந்த தடவை பொது வேட்பாளர் வெல்லும் பட்சத்தில் இப்பாெழுது ஆழும் தரப்பை சேர்ந்தவர்கள் சிறிலங்காமட்டத்தில் பெரும் பழிவாங்கல்களுக்கு உட்படலாம். அதனால் தமிழ் மக்களுக்கு எந்த லாபமும் கிடையாது. ஆனால் மனதளவில் உத்வேகம் பிறக்கலாம்.


குறிப்பு: தேர்தல் புறக்கணிப்பு பற்றி புலம்பெயர் அமைப்புகள் மற்றும் ஊடக மட்டத்தில் விவாதம் நடாத்தும் த.தே.முன்னணி இதுவரை மக்களை சந்திக்கவில்லை என்றே அறிகிறேன். மக்களால் அடையாளம் காண முடியாத அளவிற்கு மக்களில் இருந்து விலத்தி யாருக்காக அரசியல் கட்சி நடத்துகிறார்கள் என்று புரியவில்லை. த.தே.முன்னணியின் கூட்டங்களை பார்த்தால் ஒரு குறிப்பிட்ட சில வட்டத்துக்குள்தான் அரசியல் செய்வது போல் தெரிகிறது.

நன்றி
ஆதி
27-12-2014

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP