Powered by Blogger.

Monday, March 28, 2011

உள்ளுராட்சி தேர்தல்- மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் சொல்லும் பதில்


தமிழ் மக்களின் மனநிலை மாறிவிட்டது தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு மாறிவிட்டது என்று கூப்பாடு போட்டு திரிந்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தமிழ் மக்கள் வழங்கிய பதிலே உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள். அதிலும் குறிப்பட்ட விகித தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதுபோக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் தேர்தலை இடை நிறுத்துவதில் அரசு வெற்றி கண்டதையும் இங்கு ஞாபகப்படுத்தியாக வேண்டும்.

தமிழ் மக்களை பொறுத்தவரை விடுதலைப்புலிகளின் அரசியலை தவிர்த்த எந்த அரசியலும் நிதந்தர விடிவைத் தராது என்பதில் குறியாய் இருக்கிறார்கள் என்று பல தடவை நிரூபித்துவிட்டார்கள். சலுகை அரசியல்களும் சுகபோக வாழ்வாதாரங்களுக்கும் அப்பால் அரசியல் நிலைப்பாடு என்பது வித்தியாசமானது என்பதை திரும்ப திரும்ப கூறிவருகிறார்கள். ஆயுதப்போராட்டத்தின் பரிமானங்களில் இறுதி கால நிகழ்வுகள் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரித்துவிட்டது என்று அரசியல் கனவு கண்டு மக்களை திசை திருப்ப முனைந்தவர்களுக்கு போருக்கு பின்னரான இரண்டு தேர்தல்களிலும் மக்கள் சாட்டையடிகா தமது பதிலை வழங்கியிருக்கிறார்கள். அரசு செய்யும் சலுகைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்  காரணம் அது அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை. ஆனால் அரசின் சலுகைகளை பெறுவதென்பது தமது அரசியல் நிலைப்பாட்டை இல்லாது செய்து அரசிடம் மண்டியிடுவதல்ல என்பதை தெளிந்த மனிநிலையோடு மக்கள் நிரூபித்திருப்பது,விடுதலைப்புலிகள் மீதும் தமிழின விடுலை மீதும் நம்பிக்கை வைத்து களத்தில் நிற்கும் மக்கள் உலகிற்கு சொல்லியிருக்கும் செய்தி.

தமிழினத்தின் பல அரசில் கட்சிகள் இணைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் ஆதரத்தார்கள் என்பது அவர்கள் கொள்கையில் விடுதலைப்புலிகள் வைத்திருந்த நம்பிக்கை. விடுதலைப்புலிகள் காரணமின்றி தமது ஆதரவு நிலைப்பாட்டை  தெரிவிக்க மாட்டார்கள் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருப்பதென்பது விடுதலைப்புலிகளின் அரசியல் மேல் மக்கள் வைத்திருக்கும் அளப்பரிய மதிப்பும் உயிரிலும் மேலான நம்பிக்கையும் தான். அரசுடன் இணைந்திராத இந்த கூட்டமைப்பு தமக்கு சலுகைகளை பெற்றுத்தரமாட்டார்கள் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தும் தமிழ் கூட்டமைப்பை மக்கள் வெற்றி பெறச் செய்ததென்பது மக்களின் உள்மனக்கிடைக்கைளின் வெளிப்பாடு. புலம் பெயர் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக தமது கட்டுமானத்தில் பங்களிப்பார்கள் என்ன நம்பிக்கை தான் களத்தில் இருக்கும் மக்களை போராட்டத்தில் சோரவிடாது வைத்துள்ளது.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி பேசிய அரசியல் கட்சி இன்று தனது சொந்த நிலத்தில் தனியாக போட்டியிட முடியாத நிலைக்கு சிறிலங்கா அரசு தள்ளியிருக்கிறது. சிறிலங்கா அரசு தள்ளியிருக்கிறது என்பதற்கப்பால் அவர்களால் தமிழ் மக்களிடம் தனியாக நின்று அரசியல் பேசும் தைரியம் இல்லை என்பதோடு அவர்களிடம் தமிழ் மக்களின் உரிமைப்பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருவதற்கான தகுதி இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள். ஆளும் வர்க்க அதிகாரத்தினால் ஆயுத முனையில் சில தலமைப்பதவிகளை பறித்து வைத்தபடி இந்த அரசியல் கட்சிகளும் ஆளும் வர்க்கமும் செய்யும் அராஜகங்களை சொல்லமுடியாது தவிப்பதை தேர்தலூடாக மக்கள் வெளிப்படுத்தியிருப்பதாகவேபடுகிறது. யாழ் மாநகர சபையில் ஈபிடிபியும் சிறிலங்கா அரசும் மேற்கொண்டு வரும் அராஜக போக்கு இதற்கு சிறிய உதாரணம். தவிர வன்னிப்பகுதியில் சிவில் நிர்வாக அனுமதிகளுக்கு முதல் ராணுவ அனுமதிகள் தேவையென்பதும் ராணுவ பிரசன்னம் முக்கியம் என்பதையும் ஆக குறைந்தது தட்டிக்கேட்க கூட முடியாதவர்களெல்லாம் தமிழ் மக்களிடல்தில் அரசியல் செய்வதை என்னவென்று சொல்ல தெரியவில்லை.

சிறிலங்கா அரசின் இன்றைய நிலைப்பாடு

சிறிலங்கா அரசு இன்று தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை சிதைப்பதற்கு பல வழிகளில் முயற்சித்து வருகிறது. சலுகைகளை வழங்குதல் மக்கள் ஆதரவாக செயற்படுவது போல் காட்டிக் கொள்ளல் இப்படி பல முகங்களோடு களம் இறங்கியும் தமிழ் மக்கள் அந்தந்த முகங்களை கண்டுபிடித்து தேர்தலில் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எப்படி தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை சிதைப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது அரசு.

இதன் அடிப்படையில் தான் இன்று எழுத்தாளர்களினூடாக அரசு மாபெரும் உளவியல் அரசியலை நடாத்திக் கொண்டிருக்கிறது. அதாவது நடுநிலை எழுத்தாளர்கள் போன்று செயற்படுவதற்கு பல எழுத்தாளர்களளை விலைக்கு வாங்கியுள்ளது அல்லது உக்குவித்து வருகிறது. சிறிலங்கா அரசை விமர்சிக்கும் அதேவேளை விடுதலைப்புலிகளை தாறுமாறாக விமர்சிக்க வேண்டும். சிறிலங்கா அரசை விமர்சிக்குமிடத்து தமிழ் தேசியத்தின் பால் பற்றுள்ள ஒருவனுக்கு அந்த எழுத்தாளன் மேல் நம்பிக்கை வரும்..அதே நேரம் விடுதலைப்புலிகளையும் தாறுமாறாக விமர்சிக்கும் பொழுது விடுதலைப்புலிகள் பற்றிய பொய்களையும் அவர்களுக்கெதிரான கருத்துகளையும் உள்வாங்கி கொள்ளவேண்டிய மனநிலை அதை வாசிப்பவர்களுக்கு உருவாகும். இதனூடாக நாளடைவில் விடுதலைப்புலிகளின் அரசியல் நிலைப்பாட்டில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்து விடுதலைப்புலிகள் பற்றியதான அரசியலை தமிழ் மக்களிடம் இருந்து அகற்றிவிடலாம் என்று சிறிலங்கா புலனாய்வுத்துறையும் அரசியல் அனுமானிகளும் பெரிதாக நம்புகிறார்கள். அந்த அடிப்படையில் தான் இன்று "சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தது...  அதற்கு காரணம் விடுதலைப்புலிகள்" தான் என்பதும்... விடுதலைப்புலிகளின் தலைமை தவறு செய்தது என்பதும். விடுதலைப்புலிகள் மீது அவதூறு செய்து எழுத்து உலகில் ஒரு சலசலப்பை உருவாக்கி ஊடகங்களினூடாக தமது நீண்ட கால அரசிலை செய்து விடுதலைப்புலிகள் பற்றிய அரசியலை தமிழ் மக்களிடம் இருந்து அகற்றிவிடலாம் என்று சிறிலங்கா அரசு பெரிதாக நம்பி வருகிறது. இது களத்தில் நிற்கும் மக்களிடம் செல்லுபடியாகாது என்ற உண்மையை ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் சொல்லிவருவது இவர்களுக்கு பெரிய அவமானமே.


"பெடியள் இருந்தா இந்த ஆட்டம் ஆடுவினமோ" என்று தமிழர் பிரதேசங்களில் முணுமுப்புகள் இருந்து கொண்டே இருக்கிறது. இதுதான் விடுதலை குறித்த அரசியல்.இதுதான் விடுதலைப்புலிகளுக்கு மக்கள் வழங்கிய அங்கிகாரம்...விடுதலைப்புலிகளின் அரசியல் மீது தியாகங்களின் மீது இலட்சிய கொள்கை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் மரியாதையும். பேச்சிற்கு வந்து தீர்வை வழங்காத வரை மக்கள் தமது பதிலை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எல்லா நேரமும் ஒரே பாணியில் தான் பதில் அளிப்பார்கள் என்று எதிர்வு கூற முடியாது. போராட்டங்களின் பாதையை காலம் தான் தீர்மானிக்கிறது.

ஆதி
25-03-2011

Thursday, March 17, 2011

தொழிலாளர் நிலங்களை சூறையாடும் முதலாளிகள் - இலங்கை

இன்று பெரும்பான்மை ஆசிய நாடுகளில் தொழிலாளிகளை சுரண்டிச் சுரண்டியே பல அரசுகளும் முதலாளிகளும் தமது இருப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். அதில் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில், ஆழும் வர்க்கம் மாபெரும் கொள்ளைக்காரர்களாகவும் மனிதாபிமானமற்ற மிருகங்களாகவும் காணப்படுகின்றனர். இவர்கள் நோக்கம் இவர்கள் ஆட்சி செய்யும் காலப்பகுதியில் இயலுமானவரை பாமர மக்களின் சொத்துகளை சூறையாடுதல் சூறையாடிய செல்வத்தின் மூலம் இருப்பை தக்க வைத்து கொள்ளல்.

இந்த கொள்கையடிப்படையில் சிறிலங்காவின் அரசு மிகப்பெரும் அட்டூழியங்களை செய்து வருகிறது. தட்டிக் கேட்க முடியாத நிலையில் பாமர மக்களும் எதிர்க்கட்சியகளும் காணப்படுகின்றன. தொழிற்பேட்டைகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசு மற்றய நாடுகளுக்கு தாரைவார்த்துவரும் நிலங்கள் பாமர மக்களுடைய நிலங்கள் என்று எத்தனையோ தடவை ஒப்பாரி வைத்தாகிவிட்டது. ஆனால் சிறிலங்கா அரசோ அதில் இருக்கும் பண முதலைகளோ மக்களின் நலன் குறித்து எந்த அக்கறையுமற்று தமது வருமானங்களில் மட்டும் குறியாய் இருக்கின்றனர்.

போர் முடிந்த பிறகு வன்னியில் எத்தனையோ ஆயிரம் ஏக்கர் மக்களின் நிலம் அமைச்சர்மார்களின் பலவந்த பிடிகளுக்கு உள்ளாகியுள்ளது. அது போக தமிழர் தாயக பகுதிகளில் ஏனைய பகுதிகளும் இப்படியான பலவந்தங்களுக்கு உள்ளாகி வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒரு சம்பவம் தான் நுரைச்சோலை அனல் மின்னிலையம். புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் கடற்கரையை அண்டிய கிராமத்தில் இந்த அனல் மின்னிலையம் அமைக்கப்ட்டுள்ளது. மீன் பிடித்தொழில் மற்றும் விவசாயத்தை ஜீவனோபாயமாக செய்து வரும் இந்த மக்களின் நிலம் செழிப்பானது. தென்னந் தோட்டங்களாலும் மரக்கறி தோட்டங்களாலும் நிறைந்த இந்த பிரதேசசத்தின் ஒரு பகுதி இன்று சிறிலங்கா அரசால் பலவந்தமாக பறிக்கபட்டடு சீன அரசாங்கத்திடம் கொடுக்கபட்டுள்ளது.

இந்த அனல் மின்னிலைய கட்டுமானத்திலும் அதற்கு தேவையான அரைவாசி நிதியினை சம்மந்தபட்ட அமைச்சர்கள் சுருட்டிவிட்டதாக விடயம் அறிந்த சிலர் சொல்கின்றனர்.இதனால் இந்த அனல் மின்னிலைய கட்டுமானத்தின் தரம் குறைவாகவே காணப்படும் என்பது வெளிப்படை உண்மை. அது போக அதில் இருந்து வெளியாகும் புகை அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களின் செழிப்பை இல்லாது செய்யப்போவதோடு எதிர்காலத்தில் மக்களின் உடல் நலத்திலும் செய்லாவக்கு செலுத்தப்போவது உண்மை. சிறிலங்காவில் மக்கள் பாவனையற்ற எத்தனையோ நிலங்கள் இருந்தும், கடற்கரைகள் இருந்தும் அவற்றை எப்படி தொழிற் பேட்டைகளுக்கு ஏற்றவாறு மாற்றுவது.. அல்லது அதை எப்படி பாவிப்பது என்று ஆய்வுகள் செய்வதை விடுத்து மக்களின் நிலங்களை பறிப்பதும் அதன் வழங்களை சிதைத்து குறுகிய காலத்தில் தமது செல்வத்தை பெருக்குவதிலும் குறியாக இருக்கும் இந்த முதலாளி வர்கங்களை எப்படி அடக்குவது??? இந்த அதிகாரப் போக்கிற்கு எதிராக எப்படி மக்கள் திரண்டெழுவது???? இந்த அதிகார போக்குகள் கட்டுப்படுத்தாவிடில் எதிர்காலத்தில் பாமர மக்கள் வறுமையால் சாகும் நிலை உருவாகும்....

ஆதி
17-03-2011

Friday, March 4, 2011

விடுவிக்கப்பட்ட போராளிகள் - சமூகத்தில் பின்தள்ளப்படும் கதை

இன்று விடுவிக்கப்பட்டும் போராளிகள் சமூகத்தில் பின் தள்ளப்படுவதாகவும் அதனால் சமூக மற்றும் வாழ்வாதரப் பிரச்சினைகள் அந்த போராளிகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் ஆதரவுக் கூலிகள் முதலைக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துள்ளன. இந்த விடையங்களை நாங்கள் நிதானமாகவும் விரைவாகவும் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தமது உயிர்களை துச்சமென மதித்து போராடிய அனைத்து வீரர்களுமே மரியாதைக்குரியவர்கள் என்பதை எந்த சமூகமும் மறந்துவிடக் கூடாது. தமது அவயங்களை இழந்து தமது வாழ்க்கையின் பல முக்கிய படிகளை இழந்து இன்று தமிழ் மக்களின் போராட்டம் உலகமயப்படவதற்கு களத்தில் நின்ற போராளிகள் தான் முக்கிய காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் கட்டளைகளுக்கமைய செயற்பட்டு சரணடைந்த பல போராளிகள் சர்வதேச விதிகளுக்கு மாறாக சிறிலங்கா அரச படகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அது போக சில ஆயிரம் போராளிகளையே முகாம்களில் அடைத்து புனர்வாழ்வு என்ற பெயரில் பல திணிப்புகள் மற்றும் மன உழைச்சல்களுக்கு உள்ளாக்கி பின் அவர்களின் கண்காணிப்பில் வெளியில் விடப்படுகின்றனர். அவர்களில் சிலர் நேரடியாக சிறிலங்கா புலனாய்வு துறையினரின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள போதும் பலர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்ட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அந்த போராளிகளுக்கு எம்மால் இயன்ற வழிகாட்டல்கள் மற்றும் சந்தர்பங்களை உருவாக்கி கொடுக்க வேண்டும். வீரியம் மிக்க நாற்றுகள் அவர்கள். தயா மாஸ்டர் உட்பட பல ஊடக புள்ளிகள் வெளிப்படையாகவே தமிழ் இன விடுதலை போருக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருப்பதனால் அவர்கள் குறித்து எந்த அக்கறையும் கொள்ள தேவையில்லை. சாதாரண போராளிகளாக களமாடி தமது வாழ்வை தொலைத்த போராளிகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் மேல் மக்களுக்குள்ள அன்பு விடுவிக்கப்படும் போராளிகளை அரவணைக்க தூண்டியது. இந்த சந்தர்பத்தில் தான் சிறிலங்கா அரசும் சில ஒட்டுக் குழுக்களும் தமது கைங்கரியங்களை காட்ட ஆரம்பித்தனர். விடுவிக்கப்படும் போராளிகளில், கரிசனை உள்ள மக்களை நேரடியாகவும் மறை முகமாகவும் மிரட்டினர். சிலர் கொலை கூட செய்யப்ட்டனர். விடுவிக்கபட்ட போராளிகளை சமூகத்தில் இருந்து ஓரங்கட்டி விடுதலைப் புலிகள் மேல் வெறுப்பு ஏற்படச் செய்வதற்கான உளவியல் நடவடிக்கைகளை எதிரி விடுவிக்கப்பட்ட போராளிகள் விடையத்தினூடாக செலுத்தும் உத்தியை கண்டு பிடித்துள்ளான். விடுதலைப்புலிகளை பழி கூறும் ஊடக மற்றும் இலக்கிய யுத்தத்தை பல புலம்பெயர் எழுத்தாளர்களினூடு ஆரம்பித்துள்ளான். அதற்காக பிரித்தானியா உட்டபட பல இடங்களில் இருந்து சில எழுத்தாளர்களை கூட்டி ஊக்கப்படுத்தி அனுப்பி வைக்கப்ட்டுள்ளனர்.

இந்த சதி யுத்தத்தில் மாண்டு போகாது விடுவிக்கப்படும் போராளிகளின் வாழ்வியலை எப்படி வளமாக்க முடியும் என்று உள்நாட்டு மற்றும் புலம் பெயர் மக்கள் சிந்திக்க வேண்டும். விடுவிக்கப்படும் போராளிகளுக்கு நேரடியாக புலம் பெயர் தமிழர்கள் தொடர்பேற்படுத்தி தம்மால் இயன்ற உதவிகளை செய்து அவர்களை வளப்படுத்துவது பாதுகாப்பு பிரச்சினை என்று கருதினால், நிறுவனங்களினூடாக பொது அமைப்புகளினூடாக செய்யவேண்டும். எமது குரல்கள் புலத்தில் பலமாய் ஒலிப்பதற்கு களத்தில் ரத்தம் சிந்திய போராளிகளை கைவிடமுடியாது அவர்கள் குறித்த அக்கறையின்மை என்பது எமது போராட்டத்தை நசுக்குவதற்கு ஒப்பானது. புலிஎதிர்பு கோசங்களுக்கு விலைபோய் தமிழீழ தாகத்தை இல்லாது செய்து தமிழர் இரண்டாம் தரப்பு பிரஜைகள் அவர்களுக்கு உரிமை தேவையில்லை என்ற சிறிலங்கா அரச செயற்பாட்டிற்கு பக்க பலமாக மாறியிருக்கும் பழைய புலி உறுப்பினர்கள் குறித்து நாம் எந்த அக்கறையும் கொள்ள தேவையில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பில் பெரிய பொறுப்புகளில் இருந்து களம் சந்திக்காது வாழ்ந்த சில ஈனப்பிறவிகளே இன்று களத்தில் நின்ற புலிகளை வேட்டையாட புறப்பட்டுள்ளனர். பத்திரிகை ஆசிரியர்களாகவும் ஒட்டுக்குழுக்களின் சில பொறுப்பாளர்களாகவும் உருவெடுத்துள்ள இவர்கள் களத்தில் நின்ற எம் போராளிச் செல்வங்களை ஓரங்கட்டுவதற்கு கங்கணம் கட்டி நிற்கின்றனர். இதற்கு மக்கள் இடம் அளிக்க கூடாது. வேலையின்றி இருக்கும் விடுவிக்கப்ட்ட போராளிகளுக்கு வழிகாட்ட வேண்டும். நம்பிக்கை தரவேண்டும். இதற்கு உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என அனைவரிடமும் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலைப்புலிகளின் செய்தி மற்றும் இலக்கிய ஊடகப்பிரிவுகள் விளையாட்டுப் பிரிவுகள் என பெரிதளவில் களம் சந்திக்காது இயல்பாக வாழ்ந்த சில ஈனப்பிறவிகள் தான் இன்று சிங்கள படைகளுடனும் ஒட்டுண்ணிகளுடனும் இணைந்து விடுவிக்கபட்ட போராளிகளையும் அவர்களுக்கு உதவுபவர்களையும் வேட்டையாடி விடுதலைப்புலிகள் பற்றிய அரசியல் நிலைப்பாட்டை தமிழ் மக்களிடம் இருந்து அகற்றுவதற்கு மாபெரும் உளவியல் சதியுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு களமுனையில் ரத்தம் வியர்வை சிந்தி போராடி அங்கங்களை இழந்தும் வாழ்வினை தொலைத்தும் அல்லலுறும் விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கு உடனடியாக உதவ அனைவரும் கை கோர்க்க வேண்டும்.

ஆதி
05-03-2011

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP